திருச்சி: திமுக முப்பெரும் விழா நாளை கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து கரூர் செல்கிறார்.

திமுக தொடங்கப்பட்ட தினம், அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் ஈ.வே.ரா பிறந்தநாள் விழா என திமுக சார்பில் முப்பெரும் விழா கரூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நாளை வர உள்ளார்.
மேலும், செப்.17-ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் என்பதால், தமிழக அரசின் சார்பில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பது வழக்கம். இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி சென்று உறுதியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் கரூர் செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி, , மாவட்ட ஆட்சியரகம் புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆட்சியரக வளாகத்தில் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் வரும் அனைத்து அமைச்சா்கள், அரசு செயலா்கள், ஆட்சியா், அரசு அலுவலா்கள், காவல்துறையினா், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முதல்வருடன் உறுதியேற்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனா். இதற்காக ஆட்சியர் வளாகத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு தயார்படுத்தும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன.
நாளை விமானம் மூலம் திருச்சிக்கு வரும் முதல்வா், விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகிறார். இங்கு, சமூக நீதிநாள் உறுதிமொழியேற்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை வழியாக கரூா் சென்று, முப்பெரும் விழாவில் பங்கேற்கவுள்ளார் முதல்வா் மு க ஸ்டாலின்.