சென்னை: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால்  அவமதிக்கப்பட்டதாக திமுக எம்.பி. அப்துல்லா குற்றச்சாட்டி, அந்த  பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள தி.மு.க. அயலக அணிச் செயலாளர்  எம்.எம் அப்துல்லா.  இவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது, அவரிடம் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவரிடம் ஒருங்கீனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அப்துல்லா எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். அதில்,  “நேற்றைய தினம் 18/06/2024 பாராளுமன்ற கட்டிடத் வளாகத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான  சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

மதியம் 2.40 மணியளவில்,  நான் பார்லிமென்ட் ஹவுஸ் தோட்டத்திற்குள் நுழைந்தபோது சி.ஐ.எஸ்.எப் பணியாளர் என்னை நிறுத்தினார். அப்போது மக்கள் மற்றும் தமிழக அரசின் நலன்களை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் இடமான நாடாளுமன்றத்திற்கு நான் சென்றதன் நோக்கம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பிய சி.ஐ.எஸ்.எப் பணியாளர்களின் இந்த நடத்தையால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

பாதுகாப்பு பொறுப்பில் இருந்தவர்களால் இது போன்று இதற்கு முன்பு தவறாக நடத்தியதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏதும் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எனவே, சி.ஐ.எஸ்.எப் பணியாளர் என்னை விசாரித்த விதத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.  அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துள்ளது.

மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் பாதுகாவலர் என்ற முறையில், சி.ஐ.எஸ்.எப் பணியாளர்களின் இந்த முன்னோடியில்லாத தவறான நடத்தையை உணர்ந்து, தவறு செய்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநாட்டவும் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.