சென்னை: போதை பொருள்கடத்தும் கும்பல், தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணம் என்றும்,  ‘சிந்தெடிக் போதைப் பொருட்களின் புகலிடம் தமிழ்நாடு’ என திமுக அரசை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முன்னாள் திமுக பிரமுகர் போதை பொருள் கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில், மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த  நிலையில், தற்போது சென்னையில் அதிக அளவிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

விடியா தி.மு.க ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது.

தற்போது,  சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது.

சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப் பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு இந்த  விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைபொருளுடன் சிக்கிய கும்பல்! அதிர்ச்சி…