சென்னை: சென்னை திருவிக நகர் பகுதி திமுக பெண் கவுன்சிலர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான கட்டப்பஞ்சாயந்து, மாமல் வசூலிப்பு என ஏராளமான புகார்கள் எதிரொலியாக கட்சி தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், அவரது கவுன்சிலர் பதவி தொடர்கிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா. தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சாரதா. இவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா. இவர், இந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் அவர், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளஅறிவிப்பில், சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி மாநகராட்சி 65-வது கவுன்சிலரும், கிழக்கு மாவட்ட மகளிரணி வலைத்தள பொறுப்பாளருமான கு.சாரதா கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கவுன்சிலர் சாரதா, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்த நிலையிலும், பொதுமக்களின் சாதாவின் அடாவடி குறித்து ஏராளமான புகார்களை மாநகராட்சிக்கு அனுப்பிய நிலையில், அவரது கட்சி பதவி மட்டும் பறிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவரது கவுன்சிலர் பதவி பறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.