சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்தவர்,   அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்காததால், கடுப்பான பிரேமலதா, அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேவேளையில் திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனால், தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு  இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,   2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை வலுவாக அமைக்கும் கட்சி வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலேயே நீடித்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில்  சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாஜக மட்டுமே கூட்டணி வைத்துள்ள நிலையில், தேமுதிக உள்பட பல சிறிய கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில்,  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டியில், கூட்டணி அறிவிப்பு ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில்தான் நாங்கள் ஒரு தெளிவான முடிவு எடுத்து அறிவிப்போம். தவெக பற்றி நிறைய சொல்லிவிட்டோம். எங்கள் கட்சி பற்றி கருத்து சொல்கிறேன்.

ஆளுங்கட்சியினர் நிறைவேற்றிவிட்டோம் என்றுதான் சொல்வார்கள். எதிர்க்கட்சியினர் நிறைவேற்றவில்லை என்றுதான் சொல்வார்கள். நான் மக்களை தினமும் நேரில் களத்தில் சந்திக்கிறோம். அப்படி கேட்கும்போது கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதம் முடித்திருக்கிறார்கள். 50 சதவீதம் இன்னும் முடிக்கவில்லை. அதை மறுக்க முடியாது. அதனால்தான் திமுக ஆட்சிக்கு நான் 50க்கு 50 என்று கூறியுள்ளேன். இன்னும் 4, 5 மாதத்தில் இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தேமுதிக-வின் நிலைப்பாடு.

தமிழ்நாட்டில்  ஒரே ஒரு எம்ஜிஆர்தான். எம்ஜிஆருக்கு மாற்று கிடையவே கிடையாது. அதேமாதிரி ஒரே ஒரு கேப்டன்தான். கேப்டனுக்கு மாற்று கிடையவே கிடையாது. அவங்க அவங்களுக்கு அவங்கதான். அவர்கள் பிறவியிலே தலைவர்கள். அவருக்கு மாற்று இவர் என்று கிடையாது. அப்படி யாரும் எடுத்துக்கவும் முடியாது என்றார்.

பின்னர் எஸ்ஐஆர் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  வட மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி தமிழ்நாட்டில் வாக்குரிமை தர முடியும்? நிச்சயம் அது தவறான முன்னுதாரணம். அப்படி ஒரு வாக்குத் திருட்டு நடந்தால் நிச்சயம் மக்கள் புரட்சி வெடிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

இங்கே லஞ்சம், ஊழல், மலைகள் திருட்டு எல்லாம் ஆகிவிட்டது.  கடைசியில் வாக்கு திருட்டு என்று வாக்குகளையும் பறித்தால் இந்த ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பதே அவசியமில்லாதது. அப்படி ஒரு நிலை வந்தால் தமிழ்நாட்டில் மக்கள் புரட்சி வெடிக்கும். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை வெள்ளை அறிக்கை மூலம் மத்திய, மாநில அரசுகள் புரிய வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.