விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில்
வழித்துணை நாதர் கோயில் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
விரிஞ்சிபுரத்தலத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுகின்றது. தமிழகத்தின் எந்தவொரு சிம்மக்குளங்களிற்கும் இல்லாத சிறப்பை உடையது இத்திருத்தலச் சிம்மக்குளம்.
தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் செல்லும் பேருந்துப் பயணத்தின் மூலம் சென்று சதுவாலை என்னும் இடத்திலிருந்து நடந்தோ ௩ சக்கர வாகனத்திலோ சென்றால் அடையலாம்.
இங்குள்ள கோயில் 1300 வருடங்கள் பழமையானதாகும். இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.
புராண வரலாறு
பண்டைக் காலத்தில் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர் ஆலயமானது ‘நைமி சாரண்யம்’ என்றழைக்கப் பெற்ற முனிவர்|முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. சிவபெருமான் கௌரியிடம் கறுப்பு நிறமாய் இருப்பதால் ‘ஹே சங்கரீ’ என அழைக்க விளையாட்டாகக் கேட்டார் எனவும் இதனால் கோபமுற்ற கௌரி பாலாற்றின் வடகரையில் பொற்பங்காட்டினுள் ஜந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தார் என்பது வரலாறாகக் கூறப்படுகின்றது. அத்தவத்தின்போது சிம்மகுளத்தில் நீராடி தனது கருமேனி நீங்கி பொன்மேனி கொண்ட மரகதவல்லியாக மார்க்கசகாயரின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள் என்பதும் வரலாறு.
இறைவன், இறைவியர்
இக்கோயிலில் உள்ள இறைவன் மார்க்கபந்தீஸ்வரர் ஆவார். இறைவி மரகதாம்பிகை ஆவார். மூலவரான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். மேலும் இக்கோயிலில் விநாயகர், முருகனுடன் வள்ளி,தெய்வானை, தட்சணாமூர்த்தி , பைரவர் , விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் ஆகியோரும் உள்ளனர்.
பூஜைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். பிரதோஷம் வழிபாடு, சிவராத்திரி , வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
நம்பிக்கைகள்
கோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாகக் காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாகக் காய்க்கின்றன. மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.
சிம்மக்குள நீராடல் – பிரம்மாவிற்குச் சாப விமோசனம் கிடைத்த கார்த்திகை மாதம் இறுதி ஞாயிறு மகளிர் ஈர ஆடையுடன் நீராடியபின் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் உறங்குவர். அன்றிரவு உறங்குபவர்கள் கனவில் பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது தொன்நம்பிக்கை. இச்சிம்மக்குளத் தீர்த்தத்தின் பீஜாட்சர யந்திரம் ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
நேரம் காட்டும் கல்
கோயிலின் உள்ளே தென்புறத்தில், “நேரம் காட்டும் கல்” இருக்கிறது. அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்
கி. பி 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்குப் பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பெற்றது. கி. பி. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் படி ‘பிராமணர்களில் கன்னடியர், தெலுங்கர், தமிழர், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகாதானம் ஆகச் செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.’ என விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.