தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில்
இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதி நாதர், பசுபதீஸ்வரர் என்ற வேறு பெயர்களும் உள்ளன. தாயார் உலகநாயகி சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாகும்.
அமைவிடம்
தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
கோயில் வரலாறு
திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியைத் தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
கோவில் அமைப்பு
இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதாகச் சுயம்பு லிங்கமாகக் காணப்படுகின்றார். முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். முன்னால் செப்பினாலான நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. கொடிமரம் கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.
இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார் கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. அம்மன் சன்னிதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவானிற்கு தெற்கு நோக்கித் தனிக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்குப் பரிகாரம் செய்ய உகந்த கோவிலாகவும் இது விளங்குகின்றது.
சிறப்புக்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீது படுகிறது.
இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறதாகக் கூறப்படுகின்றது.
சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என தொன்நம்பிக்கை (ஐதிகம்).