அறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி

கத்தரிச் செடி.(Solanum melongenag).

தென்னிந்தியா, இலங்கை உன் தாயகம்!

வரலாறு தோன்றுவதற்கு முன்பே வந்து உதித்த பழமைச் செடி நீ! 

மணல் கலந்த வண்டல், களிமண் பகுதிகளில் வளரும் கற்பக செடி நீ!

150 செ.மீ.வரை உயரம் வளரும் நூதன செடி நீ!

ஆசியா, ஐரோப்பிய, அரேபியா நாடுகளில் அதிகமாய்ப் பயன்படும் அழகு காய்ச்செடி நீ!

திருச்செங்கோட்டில் நீ பூனைத் தலைக் கத்திரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய் தேனி-சின்னமனூரில் சிம்ரன் கத்தரிக்காய் எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் நல்வகை காய்ச்செடி நீ!

சாம்பார்,  புளிக்குழம்பு, காரக்குழம்பு, சட்னி, வத்தல் குழம்பு,வறுவல், பொரியல், கூட்டு எனப் பல்வேறு வகையில் பயன் தரும் நல் வகை காய்ச்செடி நீ!

சளி, இருமல், நரம்பு வலிவு, சிறு நீரகக்கல், வாதநோய், ஆஸ்துமா, ஈரல், கீல்வாதம் உடல் பருமன்,புற்று நோய் இதயநலம், சொறி சிரங்கு, புண் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ !

ஊதா, வெள்ளை, பச்சை,நிற காய் காய்க்கும் பசுமை செடியே!

120 நாட்கள் வரை வாழும் இனிய செடியே

ஹெக்டேருக்கு 50 டன் வரை காய் கொடுக்கும் பணப்பயிரே!

ஏழை பணக்காரர் எல்லோரின் இல்ல சமையல்கட்டிலும் சமமாய் மணக்கும் காய்ச்செடியே!

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் சதைமிகு காய்ச்செடியே!

தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டு கத்தரி செடியே!

காய்கறிகளின் ராஜாவே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி :  பேரா.முனைவர்.

ச. தியாகராஜன்(VST) 

நெய்வேலி.

📱9443405050.