காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாட ல் பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தலபுராணம்
அந்தணச் சிறுவனாக அவதரித்த திருமால், மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான். நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும், மண்ணையும் இரு அடிகளால் அளந்துவிடுகிறார். மூன்றாம் அடி வைக்க இடமில்லாததால், அதனை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாமல் மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கத் திருமால் வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம் மற்றும் திருக்கார்வானம் என வழங்கப்படுகிறது. இந்த நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கோவிலின் அமைப்பு
கோவிலின் பரப்பளவு ஏறத்தாழ 60,000 சதுர அடிகள் (5,600 m2) ஆக உள்ளது. இதன் முதன்மையான இராச கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. பல்லவத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் நகர வடிவமைப்பு இக்கோயிலை மையமாகக் கொண்டே தாமரை வடிவில் அமைந்துள்ளது.
திருவுருவின் அமைப்பு
திருமாலின் திருவுருவத்திற்கு திருவிக்ரமன் என்பதாக வழங்கப்படுகிறது. 30 அடி உயரமுள்ள நீண்ட நெடியோனின் திருவுருவம் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல், வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இந்த திருவுருவத்தின் இடது கால் உடலுக்குச் செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால் மகாபலியின் தலை மீது அழுத்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் விரிந்திருப்பதும் சிறப்பாகும்.