மங்களூரு
நேற்று முதல் டெல்லி – மங்களூரு தினசரி நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது.
கர்நாடகாவில் மங்களூரு அருகே பஜ்பேவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆயினும் மங்களூருவில் இருந்து நாட்டின் தலைநகர் புதுடெல்லிக்கு நேரடி விமானம் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.
எனவே மங்களூருவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சார்பில் தினமும் டெல்லிக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 6.40 மணியளவில் மங்களூருவில் இருந்து 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதுடெல்லிக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
நேற்று காலை 9.35 மணிக்கு அந்த விமானம் புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அந்த விமானத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறு மார்க்கமாக புதுடெல்லியில் இருந்து மங்களூரு நோக்கி காலை 6.40 மணிக்கு ஒரு விமானம் 144 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மங்களூரு விமான நிலையத்தை காலை 9.35 மணிக்கு வந்தடைந்தது.