டில்லி

டில்லி உயர்நீதிமன்றம் நீட் முதுகலைத் தேர்வு தகுதி மதிப்பெண் குறைப்பு பற்றி மத்திய அரசு பதில் அளிக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

அண்மையில் நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட்-ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.  அதாவது நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த 20-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

மருத்துவக் கலந்தாய்வில் ஏற்கனவே 2 சுற்று முடிந்த நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே முதுநிலை நீட் தேர்வு எழுதிய 3 மருத்துவ மாணவர்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

மனுவில், மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக நீட் முதுநிலை தேர்வின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், இந்த மனுவுக்குப் பதிலளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய தேர்வுகள் வாரியம் மற்றும் மருத்துவ கலந்தாய்வு குழுவுக்கு உத்தரவிட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.