டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆத்ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே மும்முணை போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு பிப்ரவரி 5ந்தேதி அன்று காலை 8 மணிக்க வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்ததது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 762 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனர்.
சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்காக 13,750 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டிருந்தன. தேர்தல்ல் 1.47 கோடி போ் இன்று வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும், இவர்களில், ஆண்கள் – 81,05,236, பெண்கள்- 66,80,277, முதல் தலைமுறை – 2,32, 815, ராணுவத்தினா் – 11,608, மூன்றாம் பாலினித்தவா் – 869, மூத்த குடிமக்கள்- 2,04,830 (80 வயதுக்கு மேற்பட்டோா்) என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா 70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக 68 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பலத்த போட்டி நிலவியது. து. இத்தேர்தலில் 60.54% வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு வாக்குப் பதிவை ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். 50,42,988 ஆண் வாக்காளர்களும் 44,08,606 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். முஸ்தாபாத் பகுதியில்தான் மிக அதிகபட்சமாக 69.01% வாக்குகள் பதிவாகின. மெஹ்ரவுலி பகுதியில் குறைந்தபட்சமாக 53.02% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று இரவு முதல் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி உள்ளன. டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டான விபேட் சரிபார்ப்புக்கும் தனியாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் தபால் வாக்குகளும், அடுத்து மின்னணு வாக்குகளும் எண்ணப்பட உள்ளது.
இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இன்று மதியம் தெரிய வரும்.