துருக்கி, சிரியாவில் இன்று அதிகாலையில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், துருக்கிக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் இன்று பிற்பகல் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று அதிகாலை  7.8 ரிக்டர் அளவில் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லையில் உள்ள நகரங்களின் பல கட்டடங்கள் குலுங்கின. 10 மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  பல இடங்களில் கட்டிங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.  பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினர்.  கட்டிட இடிபாடுகளில் ஏரானமானோர் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களை மீட்பதற்காக துருக்கி – சிரியாவின் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மிட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,300 பேர் காயமடைந்துள்ளனர். 1,700 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் மட்டும் நிலநடுக்கத்தால் 900-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோகமயமான சூழலில், அங்க மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். துருக்கி மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. இந்த துயர சம்பவத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது. சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.