ரபாட்

மொரோகோ நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பலி எண்ணிக்கை 820 ஆகி உள்ளது.

மொரோகோ நாடு வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது மொராகோ நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதாவது அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானது.  நிலநடுக்கம் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது. இதில் மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அப்போது இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

தற்போது பலி எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.