ஜெனிவா:
யிர்க்கொல்லி நோயான எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபீரியா, சியாரா லியோன், நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது.
இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை இந்த நோய்க்கு சுமார் 5 ஆயிரத்து 160 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
முற்றிலும் வித்தியாசமான இந்த நோய் குறித்து  கடந்த 1976ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டது. இந்த நோய்க்கு காரணமான வைரஸ்  ‘எபோலா வைரஸ்’  என அறியப்பட்டது.
இந்த வைரஸ் ஆப்பரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதையும் உலக சுகாதார அமைப்பு கண்டுபிடித்தது. இந்த  எபோலா விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது.
இந்த நோய் வந்தால் 90 சதவீதம் மரணத்தில் முடியும். எபோலா வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை கூட ஆகலாம். காய்ச்சல், வலியோடு நின்றுவிடாமல் அடுத்ததாக வாந்தி, பேதி, சிறுநீரக மற்றும் நுரையீரல் செயல் இழப்பு, சில நேரம் வெளி மற்றும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள எபோலா ஆறு அருகிலும், சூடானிலும் இந்த வைரஸ் தாக்கி 280 பேர் அப்போது பலியாகினர். மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.
இதுவரை எபோலா வைரஸ் காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
லைபிரீயா நாட்டில்தான் இந்த நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் 2830 பேர் உயிரிழந்துள்ளனர். கினியா நாட்டில் 1100 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த நாடுகளில் 14 ஆயிரம் பேர் எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த உயிர்க்கொல்லி வைரஸை அழிக்கும் முயற்சியில் கினியா நாட்டு அரசு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தன.
கினியா நாட்டில் உள்ள பாஸ்ஸி-குய்னீ என்ற கடலோரப் பிரதேசத்தில் நடைபெற்றுவந்த நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக இந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
சின்னம்மை நோய்க்கு போடப்படும் வட்டவடிவ தடுப்பூசி முறையே இதற்கும் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களை அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து சுமார் 12 வாரகாலம் வரை தொடரந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
முதலில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னாளில், ஆறுவயதை கடந்த குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது,
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சரிபாதி பேருக்கு ஆரம்ப காலத்தில் சற்று தலைவலி, தசைவலி போன்ற உபாதைகள் தோன்றின. எனினும், அந்த வலி எல்லாம் விரைவில் தீர்ந்தும் போனது.
எனவே, இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.