டெல்லி:  உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கெடு விதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மசோதாக்களுக்கு 3 மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வழக்கில் உச்சநீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கெடு அறிவித்தது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. நாட்டின் குடியரசு தலைவருக்கு கட்டளையிட உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து  டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் பார்த்துள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக இந்த தகவலை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களால் மதிக்கப்படும் நீதித் துறை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில்,  சில நீதிபதிகள் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறார்கள் என்றும் கூறினார். நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்திற்கு இடையிலான அதிகாரப் பிரிப்பு கோட்பாட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அரசியலமைப்பு எல்லைகளை நீதித்துறை மீறுவதாகத் தெரிகிறது

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. “சமீபத்திய தீர்ப்பின் மூலம் ஜனாதிபதிக்கு ஒரு உத்தரவு உள்ளது. நாம் எங்கே செல்கிறோம்? . “இந்திய ஜனாதிபதியை நீங்கள் வழிநடத்தும் சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க முடியாது, எந்த அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டில் என்ன நடக்கிறது? நாம் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். யாராவது மறுஆய்வு தாக்கல் செய்கிறார்களா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. இந்த நாளுக்காக நாங்கள் ஒருபோதும் ஜனநாயகத்திற்காக பேரம் பேசவில்லை.

ஜனாதிபதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க அழைக்கப்படுகிறார், இல்லையென்றால் அது சட்டமாகிறது என்று விமர்சித்ததுடன்,  நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. ‘நீங்கள் இந்தியக் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க முடியாது, நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது”, அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே…’ என கூறினார்.

துணைகுடியரசு தலைவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமான கபில் சிபல், “இன்று காலை நான் குடியரசு துணைத் தலைவரின் கருத்துகளைப் படித்தபோது ​மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் நீதித் துறை முடிவுகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது உண்மையிலேயே கவலைக்குரியது. தீர்ப்பு அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்போது அதை அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் ஞானம் என்று போற்றுகிறார்கள். ஆனால் ஒரு தீர்ப்பு அவர்களின் கருத்துகளுடன் ஒத்துப்போகாத தருணத்தில், அவர்கள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தொடங்குகிறார்கள்.

பிரிவு 142-ஐ ‘அணு ஏவுகணை’ என்று அழைப்பது மிகவும் சிக்கலானது என்று குடியரசு துணைத் தலைவருக்கு உரிய மரியாதையுடன் தெரிவிக்க விரும்புகிறேன். நமது நீதித் துறை நிறுவனங்களைத் தாக்கவோ அல்லது குறைந்து மதிப்பிடவோ கூடாது. நீதித் துறை நீதியையும் அரசியலமைப்பையும் நிலைநிறுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். நீதித் துறையின் சுதந்திரம் ஜனநாயகத்துக்கும் அடிப்படையானது. அது இல்லாவிட்டால் அனைத்து உரிமைகளும் ஆபத்துக்கு உள்ளாகும்.

ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் அமைச்சர்கள் குழுவின் ‘உதவி மற்றும் ஆலோசனை’யின் பேரில் செயல்படுகிறார்கள் என்பதை குடியரசு துணைத் தலைவர் அறிந்திருக்க வேண்டும். ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது உண்மையில் சட்டமன்றத்தின் மேலாதிக்கத்தின் மீதான தலையீடு. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை எந்தச் சூழலில் பிறப்பித்தது என்பதை குடியரசு துணைத் தலைவர் தெரிந்திருக்க வேண்டும். தனது ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களுக்கு ஆளுநர் 2 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியுமா?

நாடாளுமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றினால், குடியரசுத் தலைவர் அதை காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா? அது கையெழுத்திடப்படாவிட்டாலும், அதைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லையா?”

இவ்வாறு காட்டமாக கேள்வி எழுப்பினார்.