டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 2025க்கு  இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்துள்ள தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம், இந்த தேர்வானது   ஜூன் 15-ம் தேதி  (ஞாயிறு) நடைபெறும் என அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு (NEET UG 2025)  மே 4, 2025 அன்று பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை  நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புகளான, எம்எஸ்/ எம்டி/ பிஜி டிப்ளமோ ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வான, முதுநிலை நீட் தேர்வு  ஜூன் 15ந்தேதி நடைபெறும் என  இத்தேர்வை நடத்தும்,  தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம் (NBEMS) அறிவித்து உள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்விற்கு இன்று (ஏப்ரல் 17) முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது. இதற்கான தேர்வு ஜூன் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

முதுநிலை நீட் தேர்வு 2025

எம்எஸ்/ எம்டி/ பிஜி டிப்ளமோ ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முதுநிலை நீட் தேர்வு கட்டாயமாகும். தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம் (NBEMS) மூலம் இத்தேர்வு ஆண்டு ஒரு முறை நடத்தப்படுகிறது. இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை மருத்துவம் படிக்க தகுதியானவர்கள். இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்விற்கு (NEET PG 2025) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 17) மதியம் 3 மணி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://natboard.edu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 15-ம் தேதி இதற்கான தேர்வு 2 ஷிபிட்ஸ்களில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. தேர்விற்கான தகவல் புல்லட்டின் ஏப்ரல் 17-ம் தேதி 3 மணிக்கு வெளியாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து ஆன்லைன் வழியாக மே 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் ஜுலை 15-ம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சுமார் 52,000 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். 200 மதிப்பெண்களுக்கு கணினி வழியில் இத்தேர்வு நாடு முழுவதும் சுமார் 500 தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி சதவீதம் என்பது பொதுப் பிரிவு / பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தேர்ச்சி சதவீதம் 50% மாகவும், பொது- மாற்றத்திறனாளிகளுக்கு 45% மாகவும், எஸ்சி/எஸ்டி/ஒபிசி பிரிவினருக்கு 40% மாகவும் உள்ளது.