சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தின்போது எண்ணூர் அருகே கால்வாய் நீர் மற்றும் கடல்நீரில் கச்சா எண்ணை கலந்த விவகாரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்காக காரணமாக  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)  இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி,  எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தனியார் சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், எண்ணெய் கசிவில் பாலி-சைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (poly-cyclic aromatic hydrocarbons (PAHs)) என்ற ரசாயனம் கலந்து இருக்கும்.எனவே, இந்த எண்ணெய் படர்ந்த இடத்தில் இருந்து வரும் கடலுணவுகளை உட்கொள்ளும்போது, புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்புள்ளது என அச்சம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பகுதியில் மர்மமான முறையில் எண்ணெய் கசிவு ஏறப்பட்டது. சென்னை பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ள பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு, ஆற்று நீரில் பாய்ந்து நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழக்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளின் கசிவு, எண்ணூர் பகுதி ஆற்றில் மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவியிருந்தது. குறிப்பாக, பக்கிங்காம் கால்வாய் கலந்த எண்ணெய் கழிவு, மழைப் பொழிவின் காரணமாக கால்வாய் வழியாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது

. இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது, பக்கிங்காம் கால்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் எண்ணெய் கழிவுகள் சூழ்ந்தன. இதில் சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், பாரதி நகர் என சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளிலும் எண்ணெய் கழிவு படலமாக சூழ்ந்தது இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள குடியிருப்பு சுவர்களில் எண்ணெய் படிந்தது. மேலும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் மற்றும் கடல் நீர் பரப்பில் எண்ணெய் படலம் பரவியதால், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆய்வு கழுவினர்  இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர். இதில்,  எண்ணூரை ஒட்டிய கடல் பகுதியில் சுமார் 20 ச.கி.மீ பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்தது. இது இந்த விவகாரம் தொடர்பான தீவிரத் தன்மையை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிஎல் நிறுவனத்திற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதற்கிடையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில்,  எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்து கடல் வரை பரவியதற்கு எண்ணூரில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம்தான் காரணம் என உறுதி செய்து, பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதுடன், பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தி உள்ளத.

வழிகாட்டுதல்கள்:

பக்கிங்காம் கால்வாயில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்தப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சிபிசிஎல் நிறுவனத்தில் உள்ள அனைத்து குழாய்கள் மற்றும் தொட்டிகளில் எந்த ஒரு கசிவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெளியேற்ற வேண்டும்.

விதிமுறைகளை மீறி வெளியேற்றினால், மாசு கட்டுப்பாடு சட்டம் 1974-இன் கீழ் மாசுக் கட்டுப்பாடுச் சட்டம் தொழிற்சாலையின் செயல்பாடுகள் முடக்கப்படும்.

சிபிசிஎல் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களுக்குப் பொறுப்பேற்பதுடன், அதற்கான இழப்பீடுகளையும் நிறுவனம்தான் வழங்க வேண்டும்.

பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்.

வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,  சூழல் அறிவோம் அமைப்பின் தரப்பில், அப்பகுதியில் ஆய்வு செய்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் , “சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து தான் எண்ணெய் கழிவானது வெளியேறியுள்ளது. இந்த எண்ணெய் மற்றும் பெட்ரோலியக் கழிவுகளை அகற்றும் பணியில் தற்போது வரை அந்த நிறுவனம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. எண்ணூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட தாவரங்கள், பறவைகள், மீன்கள், அலையாத்தி காடுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. தற்போது அவை முற்றிலும் பாதிக்கபட்டு வருகிறது. இந்த எண்ணெய் கசிவு அங்கு இருக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கும் நிலை உள்ளது.மேலும், இந்த எண்ணெய் கழிவுகள் தற்போது, திருவொற்றியூர் வரை காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால், பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவலம், மாமல்லபுரம், கல்பாக்கம் வரை பரவும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, 2017ஆம் ஆண்டும் எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிப்பு கோவலம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், இது வேகமாக பரவும் நிலை ஏற்படும். மேலும், இது நீரில் கலந்தால், அவற்றை அப்புறபடுத்துவது சவலால்கள் நிறைந்த செயலாக இருக்கக்கூடும். மேலும், எண்ணெய் கசிவில் பாலி-சைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (poly-cyclic aromatic hydrocarbons (PAHs)) என்ற ரசாயனம் கலந்து இருக்கும்.எனவே, இந்த எண்ணெய் படர்ந்த இடத்தில் இருந்து வரும் கடலுணவுகளை உட்கொள்ளும்போது, புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், இது நீண்ட கால பாதிப்புகளான தோல் நோய், நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல பாதிப்புகளை உண்டாக்கும். இந்த எண்ணெய் கசிவால், இதுவரை கடலாமைகள் பாதிக்கபடவில்லை என்றாலும், ஜனவரி மாதம் கடல் ஆமைகளின் வலசை காலம் என்பதால், கிழக்கு கடற்கரையில் ஆமைகள் முட்டை போட கூடுகளை அமைக்கும். இந்நிலையில், அங்குள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றாமல் இருந்தால், அவை ஆமைகளின் இனப்பெருக்கத்தை தடுக்கும் அபயாம் உள்ளது.எனவே, இதற்கு தீர்வாக கடலில் மற்றும் கால்வாயில் படர்ந்து இருக்கும் எண்ணெய் படலத்தை வேக்கம் பம்புகளைப் (Vacuum Pumps) பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும். மேலும் திறன் வாய்ந்த வடிகட்டிகளைப் பயன்படுத்தி, கடலில் கலப்பதை தடுக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.