பீஜிங்:

பிரேசிலில் இருந்து தெற்கு சீன நகரமான ஷென்சென் நகருக்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கோழி சிறகுகளின் மாதிரிகளில் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் பீஜிங்கில் ஏற்பட்ட தொற்றின் புதிய அலை க்சின்ஃபாடி கடல் உணவு சந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்தது. அப்போதிருந்து இறைச்சி மற்றும் கடல் உணவு இறக்குமதியில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனைகளின் ஒரு பகுதியாக கோழி சிறகுகளிலிருந்து எடுக்கப்பட்ட மேற்பரப்பு மாதிரிகள் சோதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட உணவுப் பொருட்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய அனைவரையும் ஷென்சனின் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்து பரிசோதித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட தொகுதிக்கு அருகில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் சோதித்தனர். அனைத்து முடிவுகளும் எதிர்மறையாகவே வந்துள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தொற்று அபாயங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஷென்ஜென் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈக்வடாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால்களை பேக்கேஜிங் செய்வதில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா புதன்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் பல நகரங்களும் அசுத்தமான கடல் உணவுகள் பற்றி புகார் அளித்துள்ளன.

சமீபத்திய மாதங்களில் முக்கிய துறைமுகங்களுக்கு வரும் அனைத்து இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்களையும் சோதனை செய்வதோடு மட்டுமல்லாமல், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சில இறைச்சி இறக்குமதியை ஜூன் நடுப்பகுதியில் இருந்து சீனா நிறுத்தியுள்ளது.

கொரோனா முதல் தொற்றும் வுஹான் நகரில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையுடன் இணைக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஆரம்ப ஆய்வுகள் சந்தையில் விற்பனைக்கு வரும் விலங்கு பொருட்களில் வைரஸ் தோன்றியதாக பரிந்துரைத்தன.

கொரோனா வைரஸ் உணவு அல்லது உணவு பேக்கேஜிங் பொருட்களில் ஊடுருவக்கூடிய திறன் கொண்டதாக இருந்தாலும், அது இனப்பெருக்கம் செய்ய முடியாது. அறை வெப்பநிலையில் அதனால் நீண்ட காலம் வாழ முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், உணவு பாதுகாப்பு இடர் மதிப்பீட்டிற்கான சீனாவின் தேசிய மையத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தின் தலைவரான லி ஃபெங்கின் ஜூன் மாதத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், குளிர்ந்த சேமிப்பில் வைக்கப்பட்ட அசுத்தமான உணவு, பரவுவதற்கான சாத்தியமான ஆதாரமாக இருக்கலாம் என்றார்.