ஜெனிவா: கடந்த 2015ம் ஆண்டு ஐநா அவையின் உறுப்பு நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி தொடர்பான 17 இலக்குகளில், பாலின சமத்துவம் தொடர்பாக எந்த நாடுமே சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

வரும் 2013ம் ஆண்டில் அடையக்கூடிய வகையில் இந்த இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டன. கல்வி, பருவநிலை மற்றும் பாலின சமத்துவம் போன்றவை அந்த இலக்குகளில் முக்கியமானவை.

ஆனால், பெண்கள் மீதான பாகுபாடு, அவர்களுக்கெதிரான வன்முறை, பெண் சிசு கொலை உள்ளிட்ட கேடுகளை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட பாலின சமத்துவம் என்ற இலக்கை அடைய எந்த நாடும் சரியான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் குறிப்பிட்ட இலக்கில் மிக மோசமாக செயல்படும் நாடுகளில் மட்டும் 1.4 பில்லியன் என்ற மிகப்பெரிய எண்ணிக்கையில் சிறுமிகள் மற்றும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.