சென்னை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மத்திய அரசிடம் இருந்து 5 லட்சத்து 36 ஆயிரத்து 550 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து உள்ளன. அவை, 10 மண்டல மையங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

பின்னர், அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ஜனவரி 16ம் தேதி 307 இடங்களில் பதிவு செய்யப்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இதேபோல, கோவாக்சின் தடுப்பூசிகள் 20,000 என்ற எண்ணிக்கையில் தமிழகம் வர உள்ளது. அந்த தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது. படிப்படியாக அனைவருக்கும் இந்த ஊசி போடப்படும். தொடர்ந்து தமிழகத்தில் ஆர்டிபிசிஆர் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.