டில்லி

கொரோனாவின் தாக்கம் முடிவை எட்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறி உள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.   அடுத்த மாதக் கடைசியிலும் மற்றும் அக்டோபரிலும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாக இருக்கலாம் எனப் பல மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளார்.  உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் நேற்று ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் சவுமியா சாமிநாதன், “கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது.  தற்போது அதன் பரவல் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.  குறிப்பாக இரண்டாவது அலைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளன. உலக சுகாதார அமைப்பின் தொழில் நுட்பக்குழு இந்திய மக்களுக்குப் போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் திறன் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு திருப்தி அடையும் என நம்புகிறேன்.

வரும் செப்டம்பர் மத்தியில் அது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிக்கப்படும்.  வரும் நாட்களில் தடுப்பூசி குறைவாகப் போட்ட இடங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். அடுத்த  ஆண்டின் இறுதிக்குள், இந்திய மக்கள்தொகையில் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்துப் பயப்படத் தேவையில்லை. குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் இருக்கும். இதுவரை கொரோனா தொற்றால் குழந்தைகள் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளனர்.  குழந்தைகளுக்குச் செய்யப்பட்ட பரிசோதனைகளில், கொரோனாவின் தீவிர அறிகுறி குறைவாகவே இருந்தது.

ஆயினும் தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொண்டு மருத்துவ வசதிகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும். கொரோனா இறப்புக்கள் ரெம்டெசிவிர், எச்.சி.க்யூ மற்றும் ஐவர்மெக்டின் போன்ற மருந்துகளால் குறைந்ததாகக் கூற முடியாது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இந்த மருந்துகளைப் பரிந்துரைப்பது குறித்து நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.