சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும்  மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 1,538.35 கோடி மதிப்பில்  தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த திட்டத்தை புறநகர் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஓட்டுநர் இல்லாத ரயில்களை தயாரித்து இயக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,   மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டதில் இயக்கப்படும் சில வழித்தடங்களில்,  ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ரயில்களை  தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி,   முதல் மெட்ரோ ரெயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,  சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.04.2025 அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ. ஆர். ராஜேந்திரன், (மெட்ரோ ரெயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), இணை பொது மேலாளர் பி. தியாகராஜன் (மெட்ரோ ரெயில்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர் AEON மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரெயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரெயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். இதில் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் அடங்கும்.

அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரெயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி ஒப்பந்தமாகும். முதல் இரண்டு ஒப்பந்தங்கள் முன்பே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.