டில்லி:

ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரி 7 கட்சிகள் சார்பில் கையெழுத்திட்ட மனு துணைஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கைநாயுடுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, இந்த விவகாரத்தை, காங்கிரஸ்  அரசியல் கருவியாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை பயன்படுத்துவது ஆபத்தான நிகழ்வு என்று குறிப்பிட்டு உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வருகிறது.

தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரிய மனுவில்  காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட  7 கட்சிகளை சேர்ந்த  67 எம்பிக்கள் கையெழுத்திட்டனர். அதையடுத்து, அந்த மனுவை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து 7 கட்சி தலைவர்கள் கொடுத்துள்ளனர்.

இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உச்சநீதி மன்ற நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் எனப்படும் எனப்படும் கண்டன தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான அருண்ஜெட்லி,

‘‘பதவி நீக்க தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி, தனது தோழமை கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் கருவியாக பயன்படுத்த தொடங்கி உள்ளது. பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை பயன்படுத்துவது ஆபத்தான நிகழ்வு ஆகும்’’ .

‘இது ஒரு நீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை ஆகும். அத்துடன், நீங்கள் எங்களுடன் இருக்க சம்மதிக்காவிட்டால், உங்களை பழிவாங்குவதற்கு 50 எம்.பி.க்கள் போதும் என்று மற்ற நீதிபதிகளுக்கு செய்தி விடுப்பதும் ஆகும்’’ என்று கூறி உள்ளார்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு கருத்து கூறுவது  சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.