சென்னை

நாதக தலைவர் சீமானை பாலியல் குற்றவாளி என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது,  நேற்று காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல்காந்தி தமது  தந்தையைக் கொன்ற குற்றவாளிகலை தாம் ஏற்கனவே மன்னித்து விட்டதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.  இதற்கு, பதிலளித்த சீமான், ”ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவர் ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையைக் கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க?” எனப் பதிலளித்தார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டிவிட்டரில்,

”சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.  சட்டம் சரியாகச் செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது”

எனப் பதிவிட்டுள்ளார்.