லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி முடிதிருத்தும் கடையில் திடீர் என நுழைந்து தாடியை டிரிம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக மே மாதம் 2ந்தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. ஏற்கனவே ராகுல் போட்டியிட்ட வயநாடு தொகுதிதான், தனது 2வது தாய்வீடு என ராகுல் கூறியிருந்த நிலையில், அவரது ரேபரேலி வேட்பாளர் அறிவிப்பு கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், இதை பொருட்படுத்தாமல் ராகுல்காந்தி ரேபரேலியில் வேட்புமனுத் தாக்கல் செய்து, பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மே 3ந்தேதி ரேபரேலி தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த ராகுல்காந்தி, நேற்று ( மே 13ந்தேதி) முதல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவரது முதல் பிரசார கூட்டம் அந்த தொகுதிக்குட்பட்ட மஹராஜ்கன்சில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், ரேபரேலி நகரின் பிரிஜேந்தர் நகர் வழியாக ராகுல் தனது குடியிருப்பிற்கு திரும்பினார். அப்போது, வழியில் வாகனத்தை நிறுத்தி ராகுல் செய்து அருகே இருந்த சலுனுக்குள் புகுந்தார்.
’மிதுன் சலூன்’ எனும் பெயரிலான அந்த முடிதிருத்தும் கடையில் நுழைந்த ராகுலை கண்ட, பணியாளர் வியப்படைந்தார். ஆனால், ராகுல் சிரித்துக்கொண்டே, நேராக முடிதிருத்துவதற்கான நாற்காலியில் அமர்ந்த ராகுல், தம் தாடியை வெட்டி சரிசெய்யும்படி கூறினார். அந்த நாற்காலியை ராகுலின் பாதுகாப்பு படையினர் சூழ்ந்தபடி நின்றனர். பிறகு தம் தாடியை வெட்டி சரிசெய்துகொண்ட ராகுலின் முகத்தில் அனைவரையும் போல் நீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முகத்தின் நீரை தம் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார் ராகுல்.முடிதிருத்துபவருக்கு கொடுத்த கட்டணம் ரூ.500 கட்டணம் வழங்கினார். தொடர்ந்து, அந்த கடை ஊழியர்களுடன் ராகுல் புகைப்பட ம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ரேபரேலியில் ராகுல் நடத்திய முதல் கூட்டத்தில் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தினர் ராகுலிடம் கேள்விகளை எழுப்பிய நிலையில், திடீரென கூட்டத்திலிருந்த ஒரு பெண், ‘எப்போது திருமணம்?’ என்று கேட்டார்.
எப்பவும் போல் ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்திய ராகுல், ‘இனி விரைவில் முடிக்க வேண்டியது தான்’ எனப் பதிலளித்தார்.
தேர்தல் சமயங்களில் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள் அதிரடியாக ஏதாவது செய்து பொதுமக்கள் கவனத்தை கவர்வது வழக்கம். அந்தவகையில், காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி முடிதிருத்தும் கடைக்குள் சென்று, தனது தாடியை டிரிம் செய்து மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.