சென்னை
தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த வருடம் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு இந்த சிலைகள் வரும் 18 ஆம் தேதியன்று நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசின் மாசு கட்டுப்பட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி
1. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மோ கோஒல் கலக்காமல் களிமண்ணால் செய்யப்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
2. விநாயகர் சிலைகளின் ஆபரணங்கள், மற்றும் பளபளப்பான தோற்றத்துக்கு மலர் கூறுகள், வைக்கோல் மற்றும் மரத்தின் இயற்கை பிசின்கள் மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும்.
3. கண்டிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை
4. சிலைகளுக்கு ரசாயன கலவைப் பூச்சுகள் பயன்படுத்தாமல் நீர் சார்ந்த, மக்கக் கூடிய இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5. சிலைகளை அழகுபடுத்த எவ்வித செயற்கையான மாசு அதிகரிக்கும் பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கைப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
6. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும்
போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.