
கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “இறைவி” படத்தில், தங்களை மோசமாக சித்தரித்திருப்பதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் பொங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு இனி பட வாய்ப்பே அளிக்கக்கூடாது என்றும் தீர்மானம் போட்டிருப்பதாக செய்திகள் வந்தன.
இதற்கிடையே, “இறைவி” படத்தின் விளம்பரத்தை வைத்து இன்னொரு சர்ச்சை எழுந்தது. அதாவது, “சில womenகளின் கதை” என்று போஸ்டர்களில் இருந்தது. “சில” என்பதே பன்மைதான், அதில் மீண்டு women என்று குறிப்பிட வேண்டுமா என்று சிலர் விமர்சித்தனர். (woman என்று இருந்திருக்க வேண்டும்)
பிரபல எழுத்தாளர் என். சொக்கனும் இந்தத் தவறை சுட்டிக்காட்டி தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.

உடனே அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதன் பேரில் படக்குழுவினரில் ஒருவர் சொக்கனை தொடர்புகொண்டு, வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும், “இனி இப்போது அந்தத் தவறை சரி செய்ய இயலாது. இனி வரும் படங்களின் விளம்பரங்களில் கவனமாக இருப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து சொக்கன், “பொதுவாக இதுபோன்ற பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது, ‘நீமட்டும் ஒழுங்கா?’ என்றோ, ‘குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகிறாய்’ என்றோதான் முரட்டுத்தனமாகப் பதில் வரும். இந்நிலையில், இந்தப் படக்குழுவினரின் பண்பான எதிர்வினை தெம்பு தருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டாலே பிறரை மதிக்காத சினிமாக்கார்கள் பலரை பார்த்திருக்கிறோம். ஆனால் தொடர்ந்து மூன்றாவது வெற்றிப்படத்தை அளித்தாலும், பிறரது விமர்சனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சரி செய்ய முனையும் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டத்தக்கவரே!
Patrikai.com official YouTube Channel