டெல்லி: இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த்2022 போட்டிக்கு, இந்திய தடகள அணியில் நீரஜ் சோப்ரா தலைமை யில் 37 பேர் கொண்ட வீரர்கள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில், ஜூலை 28-ந்தேதி தொடங்கி, ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. 283 பிரிவுகளில் 20 விளையாட்டுக்கள்  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா உள்பட உலகின் 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், இந்திய தடகளஅணி வீரர்கள் விவரத்தை, இந்திய தடகள சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா அறிவித்து உள்ளார். அதில், ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டிஎறிதல் வீரர் நீரஜ்சோப்ரா தலைமையிலான அணியில் 37 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், வீராங்கனைகள் விவரம்:

ஆண்கள் அணி: அவினாஷ்சேபிள் (3000மீ ஸ்டீபிள்சேஸ்), நிதேந்தர்ராவத் (மாரத்தான்), எம் ஸ்ரீசங்கர் மற்றும் முஹம்மது அனீஸ் யாஹியா (நீளம் தாண்டுதல்), அப்துல்லா அபூபக்கர், பிரவீன் சித்திரவேல் மற்றும் எல்தோஸ் பால் (டிரிபிள் ஜம்ப்); தஜிந்தர்பால்சிங் தூர் (ஷாட் புட்); நீரஜ் சோப்ரா, டிபி மனு மற்றும் ரோஹித் யாதவ் (ஈட்டி எறிதல்); சந்தீப் குமார் மற்றும் அமித் காத்ரி (ரேஸ் வாக்கிங்); அமோஜ் ஜேக்கப், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜீவ், முஹம்மது அஜ்மல், நாகநாதன் பாண்டி மற்றும் ராஜேஷ் ரமேஷ் (4×400 மீ ரிலே) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பெண்கள் அணி: எஸ்.தனலட்சுமி (100 மீ மற்றும் 4×100 மீ தொடர் ஓட்டம்); ஜோதியர்ராஜி (100மீ தடைகள்); ஐஸ்வர்யா பி (நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல்) மற்றும் ஆன்சி சோஜன் (நீளம் தாண்டுதல்); மன்பிரீத் கவுர் (ஷாட் புட்); நவ்ஜீத் கவுர் தில்லான் மற்றும் சீமா அண்டில் புனியா (வட்டு எறிதல்); அன்னு ராணி மற்றும் ஷில்பா ராணி (ஈட்டி எறிதல்); மஞ்சு பாலா சிங் மற்றும் சரிதா ரோமித் சிங் (ஹேமர் த்ரோ); பாவனா ஜாட் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி (ரேஸ் வாக்கிங்); ஹிமா தாஸ், டூட்டி சந்த், ஸ்ரபானி நந்தா, எம்வி ஜில்னா மற்றும் என்எஸ் சிமி (4×100 மீ தொடர் ஓட்டம்) ஆகியோர் பெண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் ஆண்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஜ்ரங் புனியா, ரவி தஹியா ஆகியோருடன் மேலும் நான்கு மல்யுத்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.