திருநெல்வேலி
மத்திய அரசிடம் நிதியும் இல்லை நீதியும் இல்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இன்று நெல்லையில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில்,’
”தமிழக வரலாற்றுப் பெருமைக்கு நெல்லைதான் அடையாளம். சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மண் திருநெல்வேலி. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. ஓராண்டு, ஈராண்டு அல்ல 17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன். நெல்லையப்பர் கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளி தேர் ஓடும்.
தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை வறண்ட இடங்களான திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம், 2 ஆண்டுகளாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிய புறவழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பொருநை ஆற்றின் கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. ரூ.33 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக பணிகள் ஏப்ரல் மாதத்திற்கு முடிந்துவிடும். நாங்குநேரி வட்டம் மறுங்கால்குறிச்சி மற்றும் திருமலைநம்பிபுரம் கிராமங்களில் 2,291 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படும்.
மத்திய அரசிடம் தமிழகத்துக்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை. வெள்ள பாதிப்புக்கு, ரூ.37,907 கோடி நிதி கேட்டோம்; ஆனால் ரூ.276 கோடிகள் தான் கொடுத்தனர்; பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை; மத்திய அரசு மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது. நிதி தராத மத்திய அரசைக் கண்டித்தோம்; நீதிமன்றத்திற்கு சென்றோம். திருநெல்வேலி அல்வா உலகமே பேமஸ்; ஆனால் தற்போது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் அதைவிட பேமசாக உள்ளது.
கொண்டிருக்கும் கொள்கையாலும், செய்திருக்கும் சாதனைகளாலும் நாம்தான் தமிழகத்தை என்றென்றும் ஆள்வோம். அவர்கள் சதித் திட்டம் தீட்டி நேரடியாக வந்தாலும் சரி, துரோகிகளை துணைக்கு அழைத்து வந்தாலும் சரி அதனை நிச்சயம் முறியடிப்போம். ”
என்று தெரிவித்துள்ளார்.