ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நடந்த டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

இன்று ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் அமையவுள்ள, டாடா நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, டிஆர்பி ராஜா மற்றும் டாடா நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் முதவர்ர் மு.க.ஸ்டாலின்,

“இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கும், டாடா நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடிய நடராஜன் சந்திரசேகரன், இந்திய இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார். இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். உங்களுக்கும், தமிழகத்துக்கும் பல ஆண்டு உறவு இருக்கிறது

உலகளவில் சிறந்து விளங்கக்கூடிய டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிவிரி நிறுவனம் சென்னையில்தான் உள்ளது. ஹோட்டல் துறையில் தனி அந்தஸ்து பெற்ற தாஜ் ஹோட்டல்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளதால், நமது மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது.

1973ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ராணிப்பேட்டையில் தான் முதலில் சிப்காடை துவங்கி வைத்தார். தமிழகம்தான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த எலெக்ட்ரிக் வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் No.1 என நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நேற்றுக்கூட இந்து நாளிதழில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது.

பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல அனைத்தையும் உள்ளடக்கியது சமூக நீதியை உள்ளடக்கிய வளர்ச்சி. பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்டதுதான் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு சற்று தணித்து காணப்படுகிறது” என அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

தொழிற்துறைக்கு நான் கொடுத்திருக்கும் இலக்கு, 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த மாநிலமாக இந்தியாவை மேம்படுத்த வேண்டும்.

அந்த பயணத்தில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 31 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு, நேரடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி அதனை விரைவில் செயல்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

அதற்கு சான்றுதான் இந்த விழா. டாடா நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் மாதம்தான் போடப்பட்டது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு அனைத்தையும் செய்யும். அதற்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்”

என உரையாற்றி உள்ளார்.