டெல்லி

போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை தாக்கியதற்கு பதிலடியாக இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

போர் பதற்றம் காரணமாக வடமேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் மே 15 ம் தேதி வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மூடப்பட்டுள்ள 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.