சென்னை

மிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசியல் கட்சியில் ஒருவரைச் சேர்ப்பதாக இருந்தாலும், நீக்குவதாக இருந்தாலும் அக்கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார்.  அதனடிப்படையில் தான் நீக்கம், சேர்த்தல் தொடர்பான அறிவிப்புகள் வரும்.  ஒவ்வொரு கட்சியிலும் இந்த முறையே இருந்து வருகிறது. தற்போது, பாஜவில் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது

பாஜவில் கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார். பாஜவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கலை, கலாச்சார பிரிவில் உள்ள ஃபெப்சி சிவா, நடிகர் பாபு கணேஷ், விருகை கணேஷ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, சர்மா, ரிஷி, உமேஷ் பாபு ஜெயபிரகாஷ் ஆகியோரை பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கியுள்ளார்.

மேலும் இவர்களுக்குப் பதிலாக புதிய மாநிலச் செயலாளர்களாக இயக்குநர் திருமலை, நடிகர் சசிகுமார் சுப்ரமணியன், கராத்தே சங்கீதா, எழுத்தாளர் ஜனனி நாராயணன், யோகா பயிற்றுவிப்பார் ரேகா துரைலிங்கம், தயாரிப்பாளர்கள் சுகுபோ பாண்டியன், ஹரிதாஸ், ஜனனி கிருஷ்ணமூர்த்தி, கங்காதர் ஆகியோரை நியமித்து இதற்கான அறிவிப்பை அவரே தனது பெயரில் கடிதமாக வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி இதற்கான ஒரு விளக்கத்தையும் அவர் அறிக்கையாகத் தெரிவித்துள்ளார்.  தாம், புதியவர்கள் நியமிப்பதற்காக மாநிலத் தலைமையிடம் கொடுத்த பட்டியல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தற்போது இந்த பட்டியலை மாற்றுவதில் முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. என்றும்  தலைவர் அண்ணாமலை என் முடிவை ஏற்பார் என்று தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு வெளியான  சில மணி நேரத்தில், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றுக்கையில் குறிப்பிடப்பட்டபடி இல்லாமல், கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள், அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்ட அறிவிப்பை, அண்ணாமலை ரத்து செய்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.  இது குறித்து இருவரும் தலைமையிடம் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சிக்குள் ”மாநில தலைவரை விட வானளாவிய அதிகாரத்தை காயத்ரி ரகுராமுக்கு யார் கொடுத்தார்கள், எனவும் தாம் சொல்வதைத் தலைவர் கேட்பார் என்று அறிக்கையாகக் கொடுத்துள்ளது எப்படி எனப் பெரிய அளவில் கேள்விகள் எழுந்துள்ளன.