டெல்லி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி  தாக்கல் செய்தார் . இந்த மசோதாவுக்கு 293 எம்பிக்கள் ஆதரவும், 82 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான்  போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்துள்ள இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் வகையிலும், மத பாகு பாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, தற்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று நாடாளுமன்ற மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும், சபாநாயகர் அவர்களை கண்டித்து, மசோதாவை தாக்கல் செய்யச் செய்தார்.

மசோதாவை தாக்கல் செய்து அமித்ஷா பேசும்போது,  குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல என்றும்,  மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை என்றும் தெளிவு படுத்தினார்.

மேலும்,  பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளிக்கும் என்றும்,   இந்த அகதிகள், குடியுரிமை பெறுவதற்கு அவர்களின் பெற்றோர் பிறந்த இடம் தொடர்பான ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருந்தால் குடியுரிமை பெற முடியும் எனறும் கூறினார். மேலும்,  மசோதா தொடர்பான அனைத்து கேள்வி களுக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த மசோதாவுக்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  ஆனாலும், மசோதாவுக்கு லோக்சபாவில் 293 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ், திமுக உள்பட  82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.