ஐந்தாறு குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப் படங்கள் உண்டு. இவற்றில் இடம்பெறும் குறும்படங்களுள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் தனித்தனி கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள்.
அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே சொல்லப்பட்டிருக்கும். இதுதான் உலக சினிமாக்களில் வழக்கம்.
தமிழில் இதை கொஞ்சம் வேறுவிதமாய் புதுமையாய் முயற்சித்திருக்கிறார்கள் ஆறு இயக்குநர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது 6 அத்தியாயம் திரைப்படத்தில்.
முதல் அத்தியாயம் : ‘சூப்பர் ஹீரோ’ என்ற தலைப்பைக் கொண்டது இது. சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படிக்கும் வாலிபன் ஒருவன், தன்னையும் சூப்பர் ஹீரோவாகவே நினைத்துக் கொள்கிறான். தன்னுடன் சம்பந்தப்பட்டவர்கள் சிக்க இருக்கும் ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதாக அவன் கூறிக்கொண்டிருக்கிறான்.
அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர் அவன் குடும்பத்தினர். மனநல மருத்துவரும் அவன் சொல்வதை நம்பவில்லை. ஆனால் அவன் தகுந்த ஆதாரத்தைக் காட்டியதும் அவர் நம்புகிறார். ஆனாலும், உண்மையை சோதித்துப் பார்க்க ஒரு முடிவு எடுக்கிறார். அது என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
இரண்டாவது அத்தியாயம் : ‘இனி தொடரும்’ என்பது தலைப்பு. வாலிபன் ஒருவனை சிறுமி ஒருத்தி அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறாள். அதைப் பார்க்கும் ஒரு இளம்பெண், ‘அவனை ஏன் பயமுறுத்துகிறாய்?’ என்று கேட்க.. ஃப்ளாஷ்பேக் விரிகிறது.
அதைக் கேட்கும் இளம்பெண் அதிர்ச்சி அடைகிறார். ஏன் என்பதுதான் இந்த இரண்டாம் அத்தியாயம்.
மூன்றாவது அத்தியாயம் : ‘மிசை’ என்ற தலைப்பு. தன்னுடைய அறை நண்பர்கள் தன் காதலியின் புகைப்படத்துக்கு முத்தம் கொடுத்ததாகப் பேசிக் கொள்வதைக் கேட்கும் இளைஞன், அந்த நண்பர்களை கொலை செய்ய முடிவெடுத்து கத்தியை எடுக்கிறான். அப்போது அவனைத் தேடி அறைக்கு வருகிறாள் அவன் காதலி. பிறகு என்ன நடக்கிறது இந்த மூன்றாம் அத்தியாயத்தின் கதை.
நான்காவது அத்தியாயம் : ‘அனாமிகா’ என்பது தலைப்பு. ஆள் அரவமே இல்லாத வனாந்திரத்தில் இருக்கும் தன் மாமா வீட்டுக்குச் செல்கிறான் வாலிபன் ஒருவன். அந்த வீட்டில் ஒரு பெண் தூக்கு மாட்டி இறந்ததாகச் சொல்லி கிலி ஏற்படுத்துகிறார் மாமா. தவிர அந்த வீட்டில் தனியே விட்டுவிட்டு தன் காதலி வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். பயந்த சுபாவம் கொண்ட அந்த வாலிபன், எப்படி அந்த வீட்டில் இருந்தான் என்பதே கதை
ஐந்தாவது அத்தியாயம் : ‘சூப் பாய் சுப்ரமணி’ என்பது தலைப்பு. வாலிபன் ஒருவன் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், அந்தப் பெண்ணிடம் அவனை நெருங்க விடாமல் செய்வதோடு, அவனை அடி வாங்கவும் வைக்கிறது ஒரு பேய். அந்தப் பேய் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மந்திரவாதியை நாடுகிறான் அந்த வாலிபன். பேய் யாரென தெரிய வருவது தான் கதை.
ஆறாவது அத்தியாயம் : ‘சித்திரம் கொல்லுதடி’ என்பது தலைப்பு. ஓவியரான வாலிபன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பெண் ஓவியம் ஒன்று வரைந்து தரும்படி வாய்ப்பு வருகிறது. அதற்கு ரெபரன்ஸுக்காக பழைய புத்தகக் கடையில் இரண்டு புத்தகங்கள் வாங்குகிறான் இளைஞன். அப்போது ‘கோகிலா’ என்ற புத்தகமும் தவறுதலாக அந்தப் புத்தகங்களுடன் சேர்ந்து வருகிறது. அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்தபடி பெண் ஓவியத்தை வரைய ஆரம்பிக்கிறான். ஆனால், கண் மட்டும் பாக்கியிருக்கும்போது, அந்தப் புத்தகம் பாதிதான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. மீதியைத் தேடி அவன் செல்லும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ். ஸ்ரீதர் வெங்கடேசன் என வரிசைப்படி ஆளுக்கொரு அத்தியாயத்தை இயக்கி இருக்கிறார்கள்.
அமானுஷ்யம் என்பது மட்டும்தான் இந்த 6 அத்தியாயங்களையும் இணைக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் சுவாரஸ்யமான புதிய முயற்சி.
வாழ்த்துகள்.