பெய்ஜிங்:
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 10 நாட்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவரை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ ஆட்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் நேற்று அவர் பொதுவெளியில் தோன்றினார்.

சீன அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். சீனாவில் ‛சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி’ கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் சீனாவின் அதிபராக 2வது முறையாக செயல்பட்டு வருகிறார்.

இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் அவர் 3வது முறையாக பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளதா கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீனா பற்றியும், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதன்படி சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.