திண்டுக்கல்

மிழ்க அரசுப் பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர்ப் பலகை இருந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

 

தற்போது தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிற சில பேருந்துகளில், டிஜிட்டல் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாகப் பகலை காட்டிலும், இரவில் அதிகப் பிரகாசமாகக் காட்சி அளிக்கும். டிஜிட்டல் பெயர்ப் பலகை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்கள் அதனைப் பார்த்து, தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குப் போகும் பேருந்துகளை அடையாளம் கண்டு சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் பழனியில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்து பழனி, பொள்ளாச்சிக்குச் செல்லும் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அங்கு காத்திருந்த பயணிகள் ஆர்வமுடன் பேருந்தில் ஏறுவதற்கு முயன்றனர். பேருந்தில் ஒளிர்ந்து  கொண்டிருந்த டிஜிட்டல் பெயர்ப் பலகையைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பலகையில் புரியாத மொழியில் வாசகம் இடம்பெற்று இருந்தால்ல் குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற பயணிகள், பேருந்தில் ஏறத் தயக்கம் காட்டினர்.

அந்தப் பேருந்து நடத்துநரிடம் பேருந்து பொள்ளாச்சி செல்கிறதா? என்று கேட்டு அவரும் பொள்ளாச்சிக்குச் செல்கிறது என்று கூறியதையடுத்து அந்த பேருந்தில் பலர் ஏறிச்சென்றனர்.  ஆயினும் ஒருசிலர் மொழி புரியாததால் பேருந்தில் ஏறவில்லை.

இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர்,

”டிஜிட்டல் பலகை செயல்படுவதற்கான மென்பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது. எனவே அதனை இயக்கும்போது முதலில் சீனமொழியே வரும். அதன்பிறகு ஓட்டுநர் அல்லது நடத்துநர்கள் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் அந்தப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரும், நடத்துநரும் டிஜிட்டல் பலகையை ‘ஆன்’ செய்து விட்டு அப்படியே விட்டு விட்டு தமிழ்மொழியைப் பெயர்ப் பலகையில் மாற்றவில்லை. இதுவே குழப்பத்துக்குக் காரணம்” 

என்று தெரிவித்துள்ளார்.