நியூயார்க்: உயிரியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட போர் வீரர்களை உருவாக்குவதற்கான பரிசோதனையில், சீனா ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜான் ரட்கிளிஃப்.

அவர் கூறியுள்ளதாவது, “அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு, சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, சீனாவை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டும். இந்த உலகை, பொருளாதாரமாக இருந்தாலும், ராணுவ பலமாக இருந்தாலும் மற்றும் தொழில்நுட்பமாக இருந்தாலும், அனைத்து வகைகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று விரும்புகிறது சீனா.

இந்நிலையில், சீன ராணுவத்திலுள்ள சிலரை வைத்து, உயிரியல் ரீதியாக மேம்பட்ட வீரர்களாக மாற்றுவதற்கான பரிசோதனையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. ஆதிக்கத்தை அடைவதில், சீனாவுக்கென்று எந்த நெறிமுறையும் கிடையாது.

தற்போதைய நிலையில், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது சீனா. அதேசமயம், உலக ஜனநாயக மாண்புகளுக்கும் அந்த நாடு ஆபத்தானதாக இருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார் அவர்.