சென்னை: 18வதுமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள், திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஜூன் 4-ம் தேதி இரவே நன்றி தெரிவித்தார்.

இதைதொடர்ந்து,  புதிய அரசு நாளை (ஜூன் 9ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நாளை பதவி ஏற்க உள்ளது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, எம்.பி.க்கள் பதவி ஏற்புவிழா நடைபெறும். தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெறும்

இந்த நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி,   திமுக எம்பி-க்கள் கூட்டம்  இன்று  மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது  இக்கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில், மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மக்களவை உறுப்பினர்கள் பணிகள் குறித்தும் அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக  நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பி-க்களை முதல்வர் சந்தித்தார். அப்போது முதல்வருக்கு எம்பி-க்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். எம்பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்துகளை தெரிவித்தார்.