சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26-ந்தேதிகளில் முதல்வர் திருப்பத்தூர் மாவட்டம் செல்கிறார். இதன் காரணமாக, அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் மாவட்டம்தோறும் சென்று ஆய்வு பணிகள் மேற்கொள்வதுடன், முடிவுற்ற மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். அத்துடன் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாகஇ, ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக, நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக காட்பாடிக்கு அவர் செல்கிறார். அதன் பின்னர், கள ஆய்வை முடித்து விட்டு ஜூன் 26-ஆம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சர் திருப்பத்தூர் வருகையின்போது, அங்குள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார். அத்துடன் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதுகுறித்து, திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார். அன்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார். இதையடுத்து 26-ந்தேதி காலை 9 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 25, 26 ஆகிய 2 நாட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.