தருமபுரி: மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக மீண்டும்  வரும் 11ந்தேதி தருமபுரி வருகிறார்  என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரி வருகையையொட்டி, அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில்  நிகழ்ச்சிகள்  மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளையும், மேடை அமைய உள்ள இடத்தினையும், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சில பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில்  பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலை வாழ்மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.  ஏற்கனவே இரண்டு முறை தருமபுரி வருகை தந்துள்ள நிலையில், தற்போது 3வது முறையாக வருகிற 11-ந் தேதி மீண்டும் வருகை தர உள்ளார்.

அப்போது,  ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில்  தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.