சென்னை: தமிழ்நாட்டில் 69 கோவில் பணியாளர்கள், வாரிசுதாரருக்கு குடும்பநல நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,  பணிக்காலத்தில் இறந்த 3 கோவில் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.3லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருத்தணி, சுப்பிரமணியசுவாமி கோவிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற 69 கோவில் பணியாளர்கள் மற்றும் காலம் சென்ற கோவில் பணியாளர் ஒருவரின் வாரிசுதாரர் ஆகியோருக்கு ரூ.2 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 752 பணிக்கொடை வழங்கிடும் அடையாளமாக 12ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பணிக்கொடையும், மயிலாப்பூர்-கபாலீஸ்வரர் கோவில், வல்லக்கோட்டை- சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரம்-ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்த 3 கோவில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், ஆகியோரும் காணொலிக் காட்சியின் வாயிலாக திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.