சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, “வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு  என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது,

“வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழும் நாடு நமது இந்திய நாடு. பல்வேறு மதம், இனம் மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் இருப்பினும், அனைவரும் சமம் என்ற உண்மை உணர்வோடு மக்கள் அனைவரும் வாழந்து வருகிறார்கள். இத்தகைய நாட்டை ஆளும் அரசும், இத்தகைய உணர்வு கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும்.

ஆனால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி அரசானது, அனைத்து செயல்களையும் உள்நோக்கத்துடன் செய்து வருகிறது. எதை செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் திட்டங்களை தீட்டுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது, சிறுபான்மயைினரான இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது. இந்தியைத் திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது. சமூகநீதிக்கான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது.

நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை என்பது அடித்தட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வரிசையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இது சிறுபான்மை இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் என்பதால் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

வக்ஃப் சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருதற்காக ஒன்றிய பாஜக அரசு கடந்த 08.08.2024 அன்று மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

வக்ஃப் வாரியத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் மசோதா இருப்பதால் அதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம் ஏற்படும் விளைவுகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.

வக்பு சட்டத்தை திருத்துவதன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இம்மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வக்ஃப் சட்டதை ஒன்றிய அரசு திருத்த நினைக்கிறது. இதன் மூலம் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்ஃப் நிறுவனங்களின் சுயாட்சியை பாதிக்கும்.
வக்ஃப் நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம், நில அளவை ஆணையரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக வக்ஃப் நிலம் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திடம் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்து, இந்த சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும், வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்று இந்த சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறு-வகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.
“ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்ஃப் அறிவிக்க முடியும்” என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்ஃப்களைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
இஸ்லாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்கு தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்ஃப் வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவது ஆகும்.
வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்யும் முன் மாவட்ட ஆட்சியர் சரிபார்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இது, அரசு இந்தச் சொத்துக்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள்.
வக்ஃப் சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது, வக்ஃப் வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-இன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.
“வக்ஃப் பயனர்” (Waqf by user) என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீண்டகால பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப் சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. லிமிட்டேஷன் ஆக்ட் என்று சொல்லப்படும் காலவரையறைச் சட்டம் வக்ஃப் சொத்துகளுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்ஃப் ஆக கருதப்பட மாட்டாது.
இந்த பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இந்த அடிப்படையில் வக்ஃப் நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது. இந்த நிலையில் வக்ஃப் திருத்தச் சட்டமானது எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம் என நான் கருதுகிறேன்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான – மத சுதந்திரத்தை நிராகரிக்கும் – அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான- வக்ஃப் நோக்கத்துக்கு எதிரான – நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான – குழப்பமான- தேவையற்ற- பல்வேறு பிரிவுகள் வக்ஃப் திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன. இந்த திருத்தச் சட்டமானது வக்ஃப் அமைப்பையே காலப் போக்கில் செயல்பட விடாமல் முடக்கி விடும். எனவே தான் நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மதநல்லிணக்கம் – அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தீர்மானம்:

இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சிறுபான்மையினரின் நலத்தினையும் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. ஆனால் இந்த நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தினைத் திருத்துவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த முன்வரைவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.