சென்னை:   உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார்.

தமிழ்நாட்டில்,தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெற்று வருகின்றன.  ஜல்லிக்கட்டு போட்டியில் உலகபுகழ்பெற்றது  மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியாகும். இதை  காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.

இநத் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர்  எழுதியுள்ள கடிதத்தில்,  தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான் என்று  குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]