வேலூர்: வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்,  21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இரண்டு நாள் பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டிரெயின் மூலம் காட்பாடி சென்றடைந்தார். காட்பாடி ரயில் நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் காட்பாடியில் இருந்து வேலூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, காரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்,  வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மாவட்ட திமுக அலுவலகம் வரை நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்தார். பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், அவர்களிடம் கை கொடுத்து விட்டு சென்றார்

பின்னர் வாகனம் மூலமாக அங்கிருந்து மருத்துவமனையை வந்து அடைந்தார். பின்னர் வேலூரில் ரூபாய் 197 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலூரின் மையப் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு பென்லேண்ட் மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, ரூபாய் 197 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் 3,77,263.76 சதுர அடி பரப்பில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை 560 படுகைகள், 11 அறுவை சிகிச்சைகள் அரங்குகள், பிரசவ அறை, மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை அறுவையரங்கம், மருந்தகம், மத்திய கிருமி நீக்க சேவைகள் துறை என பல துறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து 1.20 கோடி மதிப்பில் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ரூ.1.20 கோடி மதிப்பில் திருவலம் பேரூட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ரூ.50 இலட்சம் மதிப்பில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ரூ.50 இலட்சம் மதிப்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ரூ.1.20 கோடி மதிப்பில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ரூ.60 இலட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சி லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டடம், ரூ.1.20 கோடி மதிப்பில் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய கட்டடம், ரூ.30 இலட்சம் மதிப்பில் பேர்ணாம்பட்டு நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டடம், ரூ.30 இலட்சம் மதிப்பில் அணைக்கட்டு மகமதுபுரம் துணை சுகாதார நிலைய கட்டடம் என , 9 இடங்களில் மொத்தம் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற  நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

அதன்படி, ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ், வருவாய் நிலையாணை எண்.21(6)-ன்படி கிராம நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து வழங்கப்பட்ட பட்டா – 2074, அரசாணை நிலை எண் 318-ன்படி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா (நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள் தவிர) – 1330;

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிரிவு செய்து வழங்கப்பட்ட பட்டா – 10,000, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு உட்பிவு செய்து வழங்கப்பட்ட பட்டா – 212, அரசாணை நிலை எண் 612-ன்படி, சர்க்கார் மனை வகைபாட்டிலிருந்து இரயத்துமனைகளாக மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பட்டா – 240, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா – 4,525;


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு தற்போது இணையவழியில் வழங்கப்பட்ட பட்டா – 1,473, அரசாணை நிலை எண் 97-ன்படி, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வரன்முறை செய்து வழங்கப்பட்ட பட்டா – 1922, என மொத்தம் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இணையவழி பட்டா மற்றும் நத்தம் வகைபாடு உள்ளிட்ட அனைத்து இனங்களில் 18,035 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்ட 21,776 பட்டாக்களையும் சேர்த்து மொத்தம் 39,811 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வேலுர் எம்.பி.  மற்றும்  திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பின்பு வேலூரில் விருந்தினர் மாளிகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணி அளவில் அங்கிருந்து அணைக்கட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி திருவுருவு சிலை மற்றும் கலைஞர் அறிவாலயம் நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.