சென்னை

ன்று சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இது நடப்பு தொடரில் சென்னையில் நடைபெறும் 2-வது ஆட்டம் ஆகும்.

இந்த போட்டியால் போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடும் என்பதால், ரசிகர்களின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்வது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

எனவே கிரிக்கெட் போட்டியைப் பார்த்து விட்டு, வீடுகளுக்குத் திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, இரவு 12.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி நீல வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமானம் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை வரை ரெயில் இயக்கப்படும்.  மேலும் பச்சை வழித்தடத்தில், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் இச்சலுகை மைதானத்திலிருந்து வீடு திரும்பும் போது மட்டுமே பொருந்தும், மைதானத்திற்குச் செல்லும் போது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.