சென்னை
ஓரின சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஆணுக்கு ஆண் மற்றும் பெண்ணுக்குப் பெண் காதல் கொள்வதோ பாலியல் உறவு கொள்வதோ தவறில்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் மதுரை நகரில் இரு பெண்கள் நட்புடன் பழகத் தொடங்கி அது காதலாக மாறியது. இருவரும் சேர்ந்த வாழ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பிரிக்க முயன்றுள்ளனர். எனவே இருவரும் சென்னைக்கு வந்து ஒரு தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கிப் பணி தேடினர்.
அவர்கள் இருவரையும் காணவில்லை எனப் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் தங்களை துன்புறுத்தக் கூடாது எனப் பாதுகாப்பு கோரி இரு பெண்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரு பெண்களின் பெற்றோருக்கும் கலந்தாய்வு அளித்தும் பெற்றோர் மனம் மாறவில்லை.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அவர், “இரு ஆணோ, பெண்ணோ காணாமல் போனதாகப் புகார் வந்தால் அதுகுறித்த விசாரணையில் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின் காவல் துறையினர் வழக்கை முடித்து, எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விடுவிக்க வேண்டும்.
இத்தகைய ஓரினச்சேர்க்கையாவார்களைக் கையாள்வதில் திறமை வாய்ந்த தொண்டு நிறுவனங்களின் பட்டியலை எட்டு வாரங்களில் வெளியிட வேண்டும். மத்திய சமூக நீதித்துறை அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்க வேண்டும். இன்னும் 12 வாரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்க வசதியாகத் தங்குமிடங்களை போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் அவர்கள் தொடர்பாகக் கொள்கைகளை வகுக்க வேண்டும். காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, கல்வித்துறைகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது சிறைகளில் பாலியல் தாக்குதல் நடைபெறாமல் தடுக்க தனியாக அடைக்க வேண்டும்.
முக்கியமாக ஓரினச்சேர்க்கையாவார்களுக்குப் பாலின மாற்றுச் சிகிச்சை வழங்கத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செயல்படும் மருத்துவர்களின் உரிமங்களைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆண், பெண் தவிர்த்து பாலின நடுநிலையாளர்களுக்கு எனத் தனி கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும். கல்வி ஆவணங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர், பாலின மாற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இனி மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வு விண்ணப்பங்களில், ஆண், பெண் மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பகுதியையும் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]