சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிருக்கு அரசின் 50% ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்துள்ளது

பிரபாகரன் என்பவர் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், “சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும்.

மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றில் பெண்களுக்கென 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை மாநகராட்சி, “கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மண்டல வாரியாக வார்டுகளைப் பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்குக் கூடுதல் வார்டுகள் வருகின்றன” என்று பதில் அளித்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது,   அப்போது“வார்டு வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தக் காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், “சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.