சென்னை

ணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் பண்டிகை நாட்களில் குறைந்த அளவு நபர்களை மட்டுமே அனுமதி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னை மாநகரில் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் காணப்படுகிறது.  இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  இதையொட்டி சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் அங்காடி பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. தற்பொழுது பண்டிகை விடுமுறை நாட்களில் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால் கோவிட் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது.

எனவே, வணிக வளாகங்களில் உள்ள அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக் கவசம் அணியாத தனிநபர்களுக்குக் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்.” 

எனக் கூறப்பட்டுள்ளது.