சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ  அனுமதி வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமான ஈட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், நல்லது கெட்டது என அனைத்து விழாக்களுக்கும் விளம்பர பலகைகள், பதாதைகள் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், விளம்பர பதாதைகள் வைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், சாலையோரங்களில் விளம்பர பதாதைககள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் அனுமதி யில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாதைகளை அகற்றவும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து,   சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இதுவரை 460-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அதில் 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  சென்னையில் உள்ள மாநகராட்சி பகுதியில் விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்  குழு சில தினங்களுக்கு முன்பு கூடியது.  இதில், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வேண்டி வழங்கப்பட்ட 1,100 விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்கியது.

பின்னர் இதுகுறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், விளம்பர பதாதைகள் வைக்க தேர்வு  செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு அனுப்பி, விளம்பரப் பலகை வைக்க உள்ள கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆராய உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்,  இதற்கு காவல் துறையின் தடையின்மை சான்றும் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விரு சான்றுகள் கிடைத்த பிறகு, விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை  மாநகராட்சிக்கு விளம்பர பதாதைகள் அனுமதி மூலம்  ஆண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.